Tuesday, December 18, 2018

2004 சுனாமி நினைவாக..........................நமது கரையோர நகரங்களின் எதிர்காலமும் அரசியலும்

அஸ்லம் சஜா

26 December 2017

இன்றுடன் 13 வருடங்கள் கடந்துவிட்டன. 2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதி இலங்கை வாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அனைவரையும் ஒரு கணம் அதிரவைத்த அந்த துயர சம்பவங்கள். இன்றும் என்றும் இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கும் காரணமான ஒரு நிகழ்வாக பதியப்பட்டிருக்கிறது. தம் வாழ்நாளிலே மறக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளை மீட்டும் இத்தருணத்தில் நாம் வாழும் பிரதேசங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் திட்டமிடவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கை சமூகத்தின் இயங்கியலில் ஒரு பாரிய மாற்றத்தினை இந்த சுனாமி ஏற்படுத்தியது. 1957ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் 1978ம் ஆண்டு சு10றாவளி என்று எம் முன்னோர் எமக்கு வரலாறு சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் 2004ம் ஆண்டும் 2009ம் ஆண்டும் இயற்கை மற்றும் மனித தூண்டுதலால் ஏற்பட்ட அனர்த்தங்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டன. இருபது அல்லது முப்பது வருட இடைவெளியில் சமூகங்களில் அது பாரிய அனர்த்தங்களானாலும் சரி அரசியல் சமூக செயற்பாடுகளானாலும் சரி சமூக ரீதியான பாரிய மாற்றங்கள் சராசரியாக இக்கால இடைவெளிகளில் ஏற்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இக்கால இடைவெளியில் தான் பரம்பரை மாற்றங்களும் உருவாகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் ஒருவர் சராசரியாக திருமணம் செய்து தனது அடுத்த பரம்பரையை உருவாக்குகின்ற வயதின் வீச்சும் இக்கால இடைவெளியாகவே காணப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான பல்வேறு அரசியல் சமூக மாற்றங்கங்களை நோக்கும் போதும் இருபத்தைந்து முப்பது வருட கால இடைவெளியி;ல் பல திருப்புமுனைகள் ஏற்பட்டிருப்பதையே நாம் அவதானிக்க முடிகிறது. இவ்வரலாற்று ஓட்டத்திலேயே எமது நகரங்களினதும் சமூகங்களினதும் குறிப்பாக இலங்கையின் கரையோர நகரங்களினதும் அதில் வாழ்கின்ற சமூகங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதைப்பற்றிய ஒரு சிறு குறிப்பை இன்றைய இந்நாளில் அதுவும் குறிப்பாக எமது எதிர்கால கிராம நகர மட்டத்திலான சமூக அரசியல் போக்கை நிர்ணயிக்கும் தருணத்தில் எழுத முற்படுகிறேன்.

உலகிலே கடலால் சுழப்பட்ட தீவுகளின் பரப்பளவு வரிசையில் இலங்கை 25வது இடத்தை வகிக்கிறது. சுமார் 1340 கிலோமீட்டர் நீளமான கடலோரத்தை கொண்டுள்ள இலங்கையின் கேந்திர நிலையைப்பற்றி அரசியல் புவியியல் ரீதியாக நாம் எல்லோரும் அறிந்த விடயம். அது எதிர்கால உலக அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதும் எமக்கு தெரியாத ஒரு விடயமல்ல. உதாரணமாக சீன அரசாங்கம் 2013ம் ஆண்டு  (the Belt and Road Initiative) 21ம் நூற்றாண்டின் கடல் மற்றும் தரை மார்க பொருளாதார பாதை - Maritime Silk Route Economic Belt)  என்ற மிகப்பாரிய திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது. அத்திட்டம் உலகிலுள்ள 65 நாடுகளை இணைக்கின்றது.

இச்சூழலில் இலங்கையின் கரையோர நகரங்கள்
(coastal cities) முக்கிய இடத்தை வகிக்கின்றன. உலகில் காணப்படும் நகரங்களில் மலையை அண்டிய நகரங்கள் மற்றும் கரையோர நகரங்கள் மிகப்பிரதான இடத்தை வகிக்கின்றன. இந்நகரங்களுக்கிடையே புவியியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் அதிகமான சனத்தொகை அடர்த்தியுடன் கூடிய நகரங்கள் கரையோரங்களிலேயே காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள 23 மாநகர சபைகளில் 11 மாநகர சபைகள் மற்றும் பல்வேறு நகர சபைகளும் கரையோரங்களிலே காணப்படுகின்றன. இலங்கையின் சனத்தொகையின் 60% கரையோர பகுதிகளிலேயே வசிக்கின்றனர். மொத்த தேசிய உற்பத்தியில் 44% கரையோர பகுதிகளிலே பங்களிப்புச்செய்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இவ்வாறு இலங்கை நாட்டின் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார பங்களிப்பினை செய்யும் கரையோர நகரங்களை அபிவிருத்தி செய்வதும்; பாதுகாப்பான பசுமை நிறைந்த வசிக்கக்கூடிய (Liveable cities) நகரங்களாக மாற்ற தவறும் பட்சத்தில் எதிர்கால சமூகம் தூய்மையாக சுவாசிக்கக்கூட முடியாத ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 2004ம் ஆண்டு சுனாமி 30,000 பேரின் உயிர்களை காவு கொண்டதோடு 500,000 மக்களையும் இடம்பெயர வைத்தது. இது இலங்கையின் 75% மான கரையோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இலங்கையை பொறுத்தமட்டில்; நமக்கும் எதிர்கால சந்ததிக்குமான மிகப்பெரும் கேந்திர மையங்களாக கரையோர நகரங்களும் கிராமங்களும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நகரங்களை ஆகக்குறைந்தது மாசற்ற துர்ய்மையான காற்றை சுவாசிக்கக்கூடிய நகரங்களாக மாற்றியமைப்போமானால் அதுவே மிகப்பெரிய சாதனையாகும்.


உலகிலே மிகச்சிறந்த நகரமாக 2017ம் ஆண்டு முதலிடத்தை பெற்ற நகரம் அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரமாகும். உலகின் 15க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களையும் அவுஸ்திரேலியாவின் ஆறு மிகப்பெரிய நகரங்களுள் நான்கு நகரங்களுக்கும் சென்ற அனுபவத்தில் மெல்பேன் போன்ற நகரங்கள் உலகிலேயே வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டிருப்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. அவுஸ்திரேலியாவின் 6 பிரதான நகரங்களில் 5 நகரங்கள் கரையோர நகரங்களாகும். மெல்பேன் நகரம் நூற்றிற்க்கு 97.5 புள்ளிகளைப்பெற்று உலகின் 140 நகரங்களில் முதன்மையைப்பெற்றது. இக்கணிப்பீடு உலகில் காணப்படும் நகரங்களின் சுகாதார சேவை, கலாச்சார பாரம்பரிய விடயங்கள் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, கல்வி உட்கட்டுமானம் மற்றும் நகரங்களின் நிலைபேறு தன்மை (stability) போன்ற விடயங்களை மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளுடம் எம்மை சிறிதளவேனும் ஒப்பிட முடியாவிட்டாலும் இலங்கையினுள் எமது நகரம் இவ்வாறான முக்கிய காரணிகளில் சிறந்து விளங்க எமது நகரங்களை நாமும் எமது அரசியல் சமுக தலைமைகளும் கடந்த காலங்களில் என்ன செய்திருக்கிறார்கள் என நினைக்கும் போது நாம் இன்னும் 30 வருடங்கள் சென்றாலும் இலங்கையிலாவது ஒரு சிறந்த பாதுகாப்பான பசுமையான நகரில் வாழமுடியுமா என்பது கேள்விக்குறியே!
ஒரு சிறந்த நகரம் உருவாக பொருளாதார ரீதியான அபிவிருத்தி சமூக செயற்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சுழலை பொருப்புணர்வுடன் கையாளுதல் என்பவற்றுடன் சிறந்த அரசியல் நிர்வாக தலைமைத்துவத்தின் வழிகாட்டல் காணப்படவேண்டும். பொருளாதார ரீதியான அபிவிருத்தியில் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், வியாபார கேந்திர நிலையமாக மாறல், சுய தொழில் முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் சரியான ஆய்வுகள் மூலம் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். இதேபோல் சமூக செயற்பாடுகளில் கல்வி சுகாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு விடயங்கள் (வீடு மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிறுவனங்கள்) மிக முக்;கிய கவனம் செலுத்தப்பட வேண்டியவை. சுற்றுச்சுழலை கையாளும் விடயங்களில் கழிவு முகாமைத்துவம் சுத்தமான நீர் வநியோகம் பசுமையான இடங்கள் சிறந்த போக்குவரத்து வசதிகள் முறையான சூழல் பாதுகாப்பு செயன்முறைகள் என்பன திட்டமிடப்பட்டு மக்களுக்கு அவற்றின் முக்கியத்துவம் வலியுருத்தப்பட வேண்டும். ஓரு நகரினுள் காணப்படும் வளங்களை இணங்கண்டு அவற்றை வினைத்திறனுடைய திட்டங்களாக மாற்றி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கரையோர நகரங்களில் காணப்படும் கடல் வளங்களை சுழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பயன்படுத்தி நகரத்தினை மிகப்பெரிய பொருளாதார மையமாக மாற்றக்கூடிய திட்டங்களை சிந்திக்க முடியும். எல்லா வகையான திட்டங்களிலும் சுகாதார சு10ழல் பாதிப்புக்களை குறைக்கக்கூடிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் அவற்றை ஊக்குவிப்பதற்குமான சலுகைகளை வழங்குவதையும் அவற்றை செயற்படுத்துவதற்கும் திட்டங்களுக்கு மாற்றமான செயற்பாடுகளுக்கும் மிகக் கடுமையான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் உள்ள10ராட்சி சபைகள் பின்னிற்கக் கூடாது.

உதாரணமாக ஒரு சிறந்த நிறுவனத்திற்கான எடுத்துக்காட்டாக இலங்கையிலுள்ள பல அரச நிருவனங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது அம்பாரை பொது வைத்தியசாலை எனது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சிறந்த தலைமையின் ஒரு அரச நிறுவனம் கொண்டிருக்கவேண்டிய அனைத்து விடயங்களையும் மிகச்சிறப்பாக திட்டமிட்டு சுழல் காரணிகளெல்லாவற்றையும் கவனித்தில்கொண்டு அமையப்பெற்ற இவ்வைத்தியசாலை உலக தரத்தில் பல விருதுகளை வென்றுள்ளது என்பது எதுவும் எம்மால் எமது நாட்டில் சாத்தியப்படுத்த முடியும் என்பதையே காட்டுகிறது. என்ற இணையத்தளத்தில் சென்று அதன் வளர்ச்சியையும் அதன் திறமையான நிர்வாக செயற்பாடுகள் மற்றும் அது பெற்ற பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அரச நிறுவனமும் அதன் சேவையையும் அபிவிருத்தியையும் சமூக பொருளாதார சு10ழல் காரணிகளை மையமாக வைத்து அது அப்பிரதேசத்தின் வளர்ச்சியிலே பாரிய பங்களிப்பினை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.

கரையோர நகரங்களைப்பொருத்தமட்டில் நிலப்பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினை என்பது நாம் எல்லோருமறிந்த விடயம். இலங்கையின் சனத்தொகை அடர்த்தி வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 2016ல் இலங்கையின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 350 பேராகும். ஆனால் நகரங்களில் அதிலும் குறிப்பாக கரையோர நகரங்களின் சனத்தொகை சில நகரங்களில் நாட்டின் சனத்தொகை சராசரி அடர்த்தியை விட 20 மடங்கு அதிகமாகும் அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 5000த்தையும் தாண்டிக்காணப்படுகின்றது. மேல்மாகணத்திலுள்ள அதிகமான கரையோர நகரங்கள் 5000த்தையும் தாண்டிகாணப்படும் அதேவேளை கிழக்கு மாகாணங்களிலுள்ள கரையோர நகரங்களான ஏறாவூர்,  காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவுகளின் சனத்தொகை அடர்த்தியும் மேல்மாகாண கரையோர நகரங்களைப்போன்று பன்மடங்கு அதிகமாகும். எனவே எதிர்கால கரையோர நகரங்களின் அபிவிருத்தி; மிகத்துல்லியமாக திட்டமிடப்படாத விடத்து சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் இல்லாமலே பல சமூக நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும்.

எமது நகர அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நகர எல்லைகளுக்குள் நடைபெறும் கட்டட நிர்மாணப்பணிகள் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரப்படவேண்டிய தேவை மிக அவசியமாகிறது. சமூக பாரம்பரிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கட்டட உட்கட்டமைப்பு வசதிகள் பாதுகாக்கப்படவேண்டும். டெல்லி மும்பாய் போன்ற இந்தியாவின் பாரிய நகரங்கள் எவ்வாறு பாரம்பரிய கலை கலாச்சார தடயங்களை பாதுகாத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நகரங்களின் சனத்தொகை இலங்கை நாட்டின் மொத்த சனத்தொகைக்கு ஒப்பானதாகும். அவ்வாறன பாரிய சனத்தொகை அடர்த்தியான நகரங்களே பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கலை கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாத்து வரும் நிலையில் இலங்கையிலுள்ள மிகச்சிறிய நகரங்களில் எமது கலாச்சார பாரம்பரிய பரிமாணங்களை அபிவிருத்தி எனும் போர்வையில் எந்த தூரநோக்கற்ற திட்டமிடல்களும் இல்லாமல் அழித்து வருகிறோம். இந்தியாவின் இன்னுமொரு நகரான சன்டிகார்  பற்றி இவ்விடத்தில் விளக்குவது பொருத்தமென நினைக்கிறேன். சர்வதேச ரீதியாக நகர கட்டக்கலைக்கும் நகர வடிவமைப்பிற்கும் ஒரு சிறந்த திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் தான் சன்டிகார் நகரம். சர்வதேச புகழ்பெற்ற பிரென்ஞ் நாட்டு கட்டிடக்கலைஞர் லா கபூச்சார் ன் திட்டமிடலில் இந்நகரம் உருவாக்கப்பட்டது. இந்நகரம் 2016ல் வின் உலகின் பண்பாட்டு மரபுரிமை நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் முதலாவது பிரதமர் ;ஜவஹர் லால் நேருவின் ஒரு கனவு நகரமாக உருவானது. இவ்வாறு பல்வேறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லமுடியும். ஆனால் எமது சமூக அரசியல் தலைமகளுக்கு கனது நகரங்களை இவ்வாறான தூரநோக்குள்ள சிந்தனையில் உருவாக்குவதற்கான தகுதியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான கட்டிட உட்கட்டுமான பொருளாதார அபிவிருத்திக்கு மேலாக சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டிய ஒரு பாரிய பொருப்பும் கரையோர நகர சமூக அரசியல் தலைமைகளுக்கு காணப்படுகிறது. மார்க்க அரசியல் கோள்கை ரீதியாக நாளுக்கு நாள் பிரிவினைக்குள் அகப்பட்டிருக்கும் சமூகத்தில் எல்லோரையும் பாதிக்கும் எத்தனையோ சமூகப்பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சமூக கலாச்சார விழுமியங்களுக்கப்பால் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை சிறுவர் துஸ்பிரயோகம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்ற சமூக குற்றங்கள் மற்றும் பொருளாதார ரீதியான மோசடிகள் களவுகள் என சமூகப்பிரச்சினைகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லமுடியும். இப்பிரச்சினைகளை சமூக வல்லுணர்களைக்கொண்டு ஆராய்ந்து இச்சீரழிவுகளை முற்றாக ஒழிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு பாதுகாப்பான ஒரு நகரமாக எமது பிரதேசங்கள் மாற்றமடைய ஒருங்கிணைந்து செயற்படவேண்டும். அதிகமான அரசியல் தலைமைகளம் அடிவருடிகளும் இதில் பங்குதாரர்களாக இருப்பது எமது நகரங்களின் சாபக்கேடாகும். இப்பிரச்சினைகளைப்பற்றி ஒரு வார்த்தையேனும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது ஏனெனில் அதில் அவர்கள் தான் மிக முக்கிய பங்குதாரர்கள். இதை அரசியல் தலைமைகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விட்டு விட்டு தனது கொந்திராத்தி வேலைகளில் கவனம் செலுத்தி இலஞ்ஞம் ஊழல் மூலமாக பொருளாதார ரீதியாக சுகபோகம் காணும் நிலையே எமது பிரதேசங்களின் துரதிஸ்டமான நிலையாகும்.

2004ம் ஆண்டு சுனாமி ஏற்படும் போது அது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. சுனாமி பூமியதர்ச்சி போன்ற பாரிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தீ, வாகன விபத்துக்கள், தொற்று நோய் பாதிப்புக்களிலிருந்து எமது நகரங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் எதிர்வரும் உள்ளுராட்சி சபைகள் சிறந்த திட்டமிடல்களை மேற்கொண்டு செயற்படவேண்டும். தூர நோக்குடன் சிந்திக்கக்கூடிய தலைமைகளும் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படும் வரை எமது நகரங்களை அழிக்க சுனாமி போன்ற மிகப்பாரிய அனர்த்தங்கள் வரவேண்டியதில்லை. எமது நகரங்களை அழிக்க நாம் தெரிவுசெய்யும் சுயநலம் கொண்ட கயவர்களும் பண முதலைகளுமே போதுமானவர்கள். கடந்த 30 வருடங்களாக நாம் தெரிவு செய்த கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் வெளிப்பாடே எமது நகரங்களின் தற்போதைய வடிவங்களாகும். இவ்வாறான நிலை தொடருமானால் மீண்டும் பல வருடங்களுக்கு கைசேதப்படவேண்டிய நிலையே ஏற்படும். சமூக அரசியல் தளங்களில் ஏற்பட்டிருக்கும் ஒரளவு சாதகமான இச்சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்தி அரசியல் மாற்றத்தினூடாக தமது உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைய ஒன்றுபடுவதே மனித வடிவில் எம்மை காவுகொள்ள நினைக்கும் பண முதலைகளிலிருந்தும் மனித சுனாமிகளிலிருந்தும் எமது நகரங்களையும் எமது மக்களையும் பாதுகாக்க முடியும். மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வூட்டப்பட்டு தனது பிரதேசங்களை முன்னேற்றுவதில் ஒரு செயற்பாட்டு பங்குதாரராக மாறாத வரை எமது நகரங்கள் மீண்டும் ஒரு அழிவை மிக விரைவில் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விரிவுரையாளர் | பொறியியல் பீடம் | தென்கிழக்கு பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment